நடிகர் விவேக்கிற்கு தண்ணியில கண்டம்... ஜெயா டிவி விவேக்கிற்கு பணத்தால கண்டம்
ஜெயலலிதா வீட்டு உப்பை தின்றவர்கள் எல்லோரும் இப்போது தண்ணியை குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு விவேக்கும் தப்பவில்லை.
Recommended Video
சென்னை: நடிகர் விவேக்கிற்கு தண்ணிய கண்டம் என்றால், ஜெயா டிவி சி.இ.ஓ விவேக்கிற்கு பணத்தால் கண்டம் வந்துள்ளது. ஜெயலலிதா வீட்டு உப்பை சாப்பிட்ட அனைவரும் இப்போது தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சசிகலா மூலம் போயஸ்கார்டனுக்குள் போய் அதிகாரம் செலுத்திய நடராஜன் திவாகரன், மகாதேவன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், சுதாகரன், ராஜராஜன், குலோத்துங்கன், டாக்டர்.வெங்கடேஷ் என பலருமே இப்போது ரெய்டு வளையத்தில் சிக்கியுள்ளனர்.
இளவரசியின் மகன் விவேக் தலையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் இத்தனை கோடி சொத்துக்களை சேர்த்தது எப்படி என்று வருமான வரித்துறைக்கு சந்தேகத்தை கிளப்பவே, அவர் சேர்த்து வைத்த பணமே கண்டமாகி விட்டது.
விவேக் ஜெயராமன்
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். மின் விபத்தில் உயிரிழக்கவே, தனது மகள்கள்,மகனோடு போயஸ்தோட்டத்தில் தஞ்சமடைந்தார் இளவரசி. அப்போது விவேக் சிறு குழந்தை. இதனால் ஜெயலலிதாவிற்கு விவேக் மீது பாசம் அதிகம்.
தலை காட்டாத விவேக்
பள்ளிப்படிப்பு முடிந்த உடன் ஆஸ்திரேலியாவில் படிப்பு, புனேயில் எம்பிஏ முடித்து விட்டு பெங்களூருவில் வேலை என அமைதியாகவே சென்றது விவேக்கின் வாழ்க்கை. ஐடிசி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜராக பணி செய்த விவேக், 2014ஆம் ஆண்டு அங்கிருந்து விலகினார்.
ஜெயலலிதாவை கவனித்த விவேக்
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறைக்குள் அடைபட்ட போது, மருந்து, மாத்திரை உள்ளிட்டவற்றைக் கொடுக்க ஜெயலலிதா தேர்வு செய்த நம்பிக்கையான நபர்தான் விவேக்.
ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ.
ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் விவேக்கை போயஸ் கார்டனுக்கே திரும்ப சொன்னார். ஜாஸ் சினிமா சிஇஓ பதவி கொடுத்து அழகு பார்த்தார். அதன் பின்னர் விவேக்கிற்கு குரு பார்வையோ, சுக்கிர திசையோ ஏதோ ஒன்று ஏற்பட உச்சத்திற்கு போனார். எதிர்கட்சியினர் ஜாஸ் சினிமா பற்றி பேசும் அளவிற்கு சர்ச்சை ஏற்பட்டது.
விவேக்கிற்கு திருமணம்
அதே சூட்டோடு சூட்டாக சசிகலா குடும்பத்தினர் விவேக்கிற்கு பெண் பார்த்து திருமணம் முடித்தனர். விவேக்கின் மாமனார் பாஸ்கர் மீதான வழக்கு சர்ச்சைகளால் திருமணத்திற்கு போகாமல் தவிர்த்து விட்டார் மறைந்த முன்னார் முதல்வர் ஜெயலலிதா.
அப்பல்லோவில் ஜெயலலிதா
விவேக் திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 75 நாட்கள் சிகிச்சை மேற்கொண்டும் உயிரோடு போயஸ்கார்டன் திரும்பவில்லை. இதுவே சசிகலா குடும்பத்தினருக்கு சாதகமாகி போனது. அனைவருமே மீண்டும் ஆக்கிரமித்தனர்.
உத்தரவிட்ட விவேக்
ஆனால் கட்சி பொறுப்பை சசிகலா, தினகரன் கையில் எடுக்க சொத்து நிர்வாகம் விவேக் கைக்கு போனது. சசிகலா சிறை செல்லவே, ஜெயா டிவி நிர்வாகம் விவேக் வசமானது. ஜெயா டிவி நிர்வாகத்தை விவேக் கையில் எடுத்த பின்னர் அதிரடி ஆரம்பமானது. ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகியை போயஸ் தோட்டத்திற்கு வரச் சொன்ன விவேக், என்னையோ கீர்த்தனாவையோ கேட்காமல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். நானும், கீர்த்தனாவும் மட்டும்தான் நிர்வாக இன்சார்ஜ், அவங்க சொன்னாங்க.. இவங்க சொன்னாங்கன்னு எதையும் செய்ய வேண்டாம்.
சிலிர்த்து எழுந்த விவேக்
ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை கைப்பற்றுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறவே அதற்கு விவேக் உடனடியாக அறிக்கை வெளியிட்டார். மக்களின் பேரபிமானம் பெற்ற ஒரு நடுநிலை தொலைக்காட்சியை அரசு நிர்வாகமோ, அரசியல் கட்சியினரோ எப்படி கையகப்படுத்த முடியும்? என்று கேட்டார்.
சட்ட ரீதியாக சந்திப்போம்
அடுத்தடுத்த நெருக்கடிகள் மூலம் ஒரு நிறுவனத்தை அடிபணிய வைத்துவிட முடியும் என யாரும் கனவுகாண வேண்டாம். ரெய்டு, வழக்கு என எங்களுக்கு மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. பொய் வழக்குகளை ஜோடித்து எங்களை வீழ்த்த நினைத்தால் அதை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் அறிக்கையில் கூறியிருந்தார் விவேக்.
விவேக்கிற்கு கண்டம்
விவேக் திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அரசுக்கு எதிரான அறிக்கை வெளியானது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். ஐடிசியில் வேலை செய்த போது கூட இந்த சோதனையை சந்திருக்க மாட்டார், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ பொறுப்பை எப்போது ஏற்றுக்கொண்டாரோ அப்போதே பலரின் கண்காணிப்பு வளையத்திற்குள் சென்றார் விவேக்.
பதில் சொல்வாரா விவேக்
விவேக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் சம்பாதித்த பணம் நேர்மையானதாக இருந்தால் அவர் சொன்னது போல சட்ட ரீதியாக சந்திக்கலாம். ஆனால் தப்பு செய்திருந்தால் அதற்கு தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும்.