சாவில் சந்தேகம்- மாணவி மோனிஷா உடலுக்கு மறுபிரேத பரிசோதனை முடிவடைந்தது
சென்னை: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியான மோனிஷாவின் உடலுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி எஸ்.வி.எஸ் தனியார் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர், கிணறு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இது தொடர்பாக கல்லூரி தாளாளர் வாசுகி, அவருடைய கணவர் சுப்பிரமணியன், மகன் சுவாகித் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான சென்னை எர்ணாவூரை சேர்ந்த மோனிஷா என்ற மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே விழுப்புரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில் அவரது தந்தை தமிழரசன் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து மறுபிரேத பரிசோதனைக்கு அனுமதி கிடைத்தது.
இதையடுத்து, இன்று சென்னை கொண்டுவரப்பட்ட மோனிஷாவின் உடலுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே நடந்தது கொலையா, தற்கொலையா என்பது தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.