ஏமாற்றிய பருவமழை: கேள்விக்குறியாகும் நெல் உற்பத்தி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் நெல் உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நீரை கொண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் நடக்கிறது. இவ்விரு மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழை ஏமாற்றினாலும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து பிசான பருவ சாகுபடிக்கு கை கொடுக்கும்.
வடகிழக்கு பருவமழையின் முக்கிய காலமான நவம்பர் மாதம் முடியும் தருவாயில் இருப்பதால் இன்று வரை போதிய மழை பெய்யவில்லை. இதனால் பிசான பருவ சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு 1,34,178 ஏக்கர் பரப்பளவில் நெல் விளைவிக்க வேளாண்மை துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் விவசாயிகள் வெறும் 7,793 ஏக்கர் மட்டுமே நாற்று நட்டு நடவு தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பருவ மழை காலத்தில் கொட்டித் தீர்த்த மழையை ஒப்பிடும்போது 5ல் ஒரு பங்கு மழை கூட இந்தாண்டு பெய்யவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெல்லை மாவட்டத்தில் 234.59 மிமீ மழை பெய்தது. இந்தாண்டு அக்டோபர் மாதம் 84 சதவீதம் தான் மழை பெய்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கவலை தரும் விதத்திலேயே உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பாபநாசம் உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் சதம் அடித்திருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வானம் மப்புடன் காணப்பட்டாலும் மழை இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.