அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக்கு 5 தொகுதிகள் கிடைக்குமாம்... சொல்கிறார் டாக்டர் சேதுராமன்
திருச்சி: அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக்கு 5 தொகுதிகள் கிடைக்கும் என அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி இடம் பெற்றுள்ளதாகவும் குறைந்தது 5 தொகுதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சேதுராமன், வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. அணியில் நீடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். தென் மாவட்டங்களில் 15 முதல் 20 தொகுதிகளிலும் வட மாவட்டங்களில் 10 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் எங்கள் கட்சி உள்ளது.
இதனால் 5 முதல் 8 தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டுள்ளோம். 5 இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் போராட்டங்களை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்ட கள ஆய்வு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டதக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பதால் நேர்மையான நிர்வாகமும், லஞ்சம் இல்லாத நிலையும் ஏற்படும். தமிழகத்தில் மது விலக்கு அவசியம் என்றார்.