கோடை விடுமுறையால் அதிகரிக்கும் ரயில் பயணிகள்- பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1500 போலீசார்
மதுரை: கோடைவிடுமுறையில் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன் நேற்று மதுரை ரயில்வே போலீஸ் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர், ""கோடைவிடுமுறை தொடங்கியுள்ளதால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கூடுதலாக 1500 போலீஸ்:
அதனை தொடர்ந்து குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வருகிற ஜூன் மாதம் வரை ரோந்து பணிக்காக கூடுதலாக 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயின் பறிப்புகளைத் தடுக்க:
அதாவது ஒவ்வொரு ரயிலிலும், வருகிற ஜூன் மாதம் வரை 6 போலீசார் ரோந்து பணிக்கு செல்வர். ரயில்களில் பெரும்பாலும், அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பெண் பயணிகளிடம் செயினை பறித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கதவை மூட உத்தரவு:
இதற்காக ரயில் புறப்பட்டவுடன் ரயில் பெட்டியின் கதவுகளை மூடுவதற்கு ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தீவிரமான கண்காணிப்பு:
அதேபோல, நள்ளிரவில் வயதான பயணிகள் ரயில்களில் இருந்து இறங்கி பிளாட்பாரங்களில் நிற்பது வழக்கம். அந்த சமயங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாட்களாக ரயில்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது.
தண்டவாள தடுப்புப் பிரிவு:
ரயில்களில் அடிபட்டு இறந்து போகும் சம்பவங்களை தடுப்பதற்காக தண்டவாள தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் விபத்தில் இறக்கும் சம்பவங்களும் குறைந்துள்ளன.
சில்மிஷம் செய்தால் சங்குதான்:
ரயில்பெட்டிக்குள் மது அருந்திவிட்டு சக பயணிகளிடம் தகராறு செய்பவர்கள், பெண் பயணிகளிடம் சில்மிஷங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடனடியாக புகார் மனு:
இந்த குற்ற செயல்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்கள், படித்தவர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அரசுத் துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிகள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக புகார் மனு ரசீது வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.