சென்னை மாநகரில் திமுக கட்டிய பாலங்கள்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு மா.சுப்பிரமணியன் பட்டியலுடன் பதிலடி
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதி உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் இன்று வெளிியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் ஒன்றுக்கு பட்டியலோடு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடந்தகால தி.மு.க ஆட்சியில் எத்தகைய வளர்ச்சிப் பணிகளும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை பெருநகரில் நடைபெறவில்லை எனவும், அத்தகையப் பணிகள் யாவும் அண்மைக்கால அ.தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதைப் போலவும் ஒரு கற்பனைக் கதையை போகிறப் போக்கில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
முதலமைச்சராக மட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறையினையும் சேர்த்தே தம் வசம் வைத்திருக்கும் பழனிச்சாமி , பாலங்கள் குறித்து பேசுகிற போது "திமுக ஆட்சியில் முறையாக திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டு பாதியில் விடப்பட்ட பல மேம்பாலப் பணிகள் தங்களது ஆட்சிக் காலத்தில்தான் முறையாக நிறைவேற்றப்பட்டது" என்றும் கூறியிருக்கிறார்.
தனித்துறை
தற்போது பழனிச்சாமி நிர்வகித்து வரும் நெடுஞ்சாலைத் துறையே தமிழகத்தின் சமூக, பொருளாதார தொழில் வளர்ச்சிகளுக்குத் தேவையான அடித்தளங்களை உருவாக்கிடும் முயற்சிகளில் சாலை வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகுமென கருதியதன் விளைவாக 01-08-1996இல் தனித்துறையாகவும், 26-03-1998இல் அதற்கான தனி அமைச்சகமும் அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதுதான். பின்னர் அத்துறையின் வாயிலாக, தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை எடுத்துரைத்தால் ஏடுகள் போதாது.
பொதுப்பணித்துறை
1996இல், ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியைத் தி.மு.க கைப்பற்றும் வரை மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்றவற்றை கட்டமைக்கும் பணி மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இவற்றின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வந்தது.
மேயருக்கே அதிகாரம்
இந்த நிலையினை மாற்றி, மக்களே நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுத்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மாநகராட்சியின் வாயிலாகவே முதன் முறையாக பத்து மேம்பாலங்கள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, பீட்டர்ஸ் சாலை, பாந்தியன் சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட ஒன்பது சாலை சந்திப்புகளில் புதியதாக மேம்பாலங்கள் கட்டப்பட்டது. தொழிநுட்பம் சார்ந்த காரணங்களால் பெரம்பூரில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாலப் பணி மாத்திரமே, தடைப்பட நேர்ந்தது.
மீதி பணம் திருப்பி கொடுத்தோம்
மேற்கண்ட பாலங்கள் கட்டுவதற்கான மதிப்பீட்டுத் தொகை 94.50 கோடி ரூபாயில் 60.70 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு, 33.72 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படாமல் மீண்டும் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டதும், அத்தகையப் பாலங்களில் ஒன்றான சர்தார் பட்டேல் சாலையில் அமைக்கப்பட்ட பாலத்தின் சிறந்த வடிவமைப்பைப் பாராட்டி மும்பையைச் சார்ந்த ‘Indian Institute of Bridge Engineers' எனும் நிறுவனம் ‘Best of Bridge' எனும் சிறந்த பாலத்திற்கான விருது வழங்கியதையும், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பெரம்பூர் மேம்பாலம் திறப்பு
தொடர்ந்து 2006இல், மீண்டும் சென்னை மாநகராட்சியைத் திமுக கைப்பற்றியப் பிறகு தடைப்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தின் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 28-3-2010இல் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு மாத்திரமல்லாமல் 30-3-2008இல், 9 கோடியே 72 லட்சம் செலவில், வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை சந்திப்பிலும்; 14-8-2008இல் 19 கோடியே 80 லட்சம் செலவில் துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பிலும்; 29-12-2008இல், 16 கோடியே 50 லட்சம் செலவில் கோபதி நாராயணா சாலை - திருமலைச் சாலை சந்திப்பிலும்; 11-12-2009இல், 19 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் செனடாப் சாலை - டர்ன்புல்ஸ் சாலையில் ‘திரு. ஜி.கே. மூப்பனார் பெயரிலும்'; 11-12-2009இல், ரூபாய் 6 கோடியே 3 லட்சம் செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே சைதை மார்க்கெட் -கிண்டி தொழிற்பேட்டையை இணைக்கும் வகையில் ஆலந்தூர் சாலையில் ‘மிசா ஆபிரகாம்' பெயரிலும் மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டு அன்றைய உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்வராக இருந்த வணக்கத்திற்குரிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் தலைவர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆற்றுப்பாலங்கள்
மேலும் 12 கோடியே 20 லட்சம் செலவில் கத்திவாக்கம் நெடுஞ்சாலை காக்ரேன் பேசின் சாலை, இரயில்வே இருப்புப் பாதையினைக் கடக்கும் வகையில் மேம்பாலமும், 3 கோடியே 52 இலட்சம் செலவில் கிருஷ்ணமூர்த்தி நகர் - மகாகவி பாரதி நகர் இடையே செல்லும் கேப்டன் காட்டன் கால்வாயின் குறுக்கே ஒரு பாலமும், 2 கோடியே 9 லட்சம் செலவில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே, எம்.எஸ்.கே. நகர் மற்றும் நரசிம்மா நகரை இணைக்கும் பாலமும், 3 கோடியே 38 லட்சம் செலவில் கூவம் ஆற்றின் குறுக்கே, மேத்தா நகர் ஆபிசர்ஸ் காலனி முதல் தெருவையும் - வெங்கடாசலபதி தெருவையும் இணைக்கும் பாலமும், 2 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் ஓட்டேரி நல்லா ஆற்றின் குறுக்கே இணைப்புப் பாலமும், 3 கோடியே 12 இலட்சம் செலவில் அடையார் இந்திராநகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இணைப்புப் பாலமும், 1 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே வளைவுப் பாலமும் அமைக்கப்பட்டது.
மத்திய கைலாஷ் பாலம்
மேலும் 10 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில், மணியக்காரச் சத்திரத் தெருவில் ஒரு சுரங்கப்பாதையும், 4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒரு சுரங்கப்பாதையும், 13 கோடியே 39 லட்சம் செலவில், வில்லிவாக்கம் ரயில் பாதையைக் கடப்பதற்கான ஒரு சுரங்கப்பாதையும் கட்டப்பட்டது.
1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வாலாஜா சாலை பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே அமைந்த பாலமும், 2 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மத்திய கைலாஷ் அருகில் இருந்த பாலமும் அகலப்படுத்தப்பட்டது.
போராடி திறந்தோம்
மேலும் 15 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் ரங்கராஜபுரம் ரயில் பாதையின் குறுக்கே கட்டத் தொடங்கிய மேம்பாலம் 80 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்பாலம் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநகராட்சியில் தி.மு. கழக நிர்வாகத்தின்போது 23 கோடி ரூபாய் செலவில் தங்கச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணி நிறைவடையும் தருவாயில் இருந்தது. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றப் பிறகும், அப்பாலம் திறக்கப்படாததால் தி.மு. கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாக அப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
கத்திப்பாரா மேம்பாலம்
மத்திய அரசில் தி.மு. கழகம் அங்கம் வகித்ததன் விளைவாக, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அம்பத்தூர் அருகே அமைந்த பாடி மேம்பாலமும், கோயம்பேட்டில் அமைந்த மேம்பாலமும், மீனம்பாக்கத்தில் அமைந்த மேம்பாலமும், பல்வேறு காரணங்களுக்காகச் சென்னைக்கு வருகைத் தரும் வெளிநாட்டவரும் வியந்து பார்க்கும் வகையில் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவில் அமைந்த கத்திப்பாரா மேம்பாலமும் தி.மு.கழகத்தின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது.
பல பாலங்கள்
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அண்ணாநகரில் ஒரு மேம்பாலமும், வடபழனியில் ஒரு மேம்பாலமும், மேற்கு அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் ஒரு மேம்பாலமும், வடச்சென்னை மூலக்கடை அருகில் ஒரு மேம்பாலமும், வியாசர்பாடி கொல்கத்தா நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டது. போரூர் அருகில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி தற்போது முடிவுறும் தறுவாயில் உள்ளது. இவற்றில் பல மேம்பாலங்கள் அன்றைய உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டார்
இது தொடர்பாக, சட்டசபையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அன்றைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, ஒரே ஒரு எடுத்துக்காட்டாக, கொருக்குப்பேட்டை காக்ரேன் பேசின் சாலை மேம்பாலம் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டார். அதுவும் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை எடுத்துக்கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டது இன்றளவும் அவைக் குறிப்பில் உள்ளது. இத்தகைய செய்திகள் எதையுமே தெளிவாக தெரிந்து கொள்ளாமல், தனக்கு எதிராக செயல்படும் ஓ.பி.எஸ். அணிக்கு பதில் தருவதைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஆதாரமில்லாமல் பொதுமேடையில் பேசும் முதலமைச்சர் பழனிச்சாமி இனியாவது தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.