தோண்டத் தோண்ட விடாமல் வெளிக் கிளம்பி வரும் பணம் பணம் பணம்...!
சென்னை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து பணம் குவியல் குவியலாக சிக்கி வருவது தேர்தல் ஆணையத்தை அதிர வைத்துள்ளது. தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருகின்றன என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டை நடந்து வருகிறது.
எத்தனை சோதனைகள் நடத்தினாலும், கெடுபிடிகளைச் செய்தாலும் பணப் பட்டுவாடா மட்டும் அடங்கவே இல்லை.
தர்மபுரி மாவட்டம், அரூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 60 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரூர் புறவழிச்சாலையில் அப்துல்லா என்பவரின் இரும்புக் கடையில் ஏராளமான பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் 77 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 17 லட்சத்துக்கான ஆவணங்களை அப்துல்லா சமர்ப்பித்தார். மீதம் உள்ள பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அதிமுக பிரமுகர் ரவி என்பவரது தோட்டத்தில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். சுல்லேறும்பு கிராமத்தில் உள்ள இந்தத் தோட்டத்தில் மது, பணம் பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
ஊட்டி, சேரிங் கிராஸ் பகுதியில் அதிமுக பிரமுகர் போஜனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.