94 தொகுதிகளில் அதீத பணப்புழக்கம்.. பீதியைக் கிளப்பும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தின் 94 சட்டசபைத் தொகுதிகளில் பணப்புழக்கம் வழக்கத்திற்கு விரோதமாக அதிகமாக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இங்கு கண்காணிப்பை அதிகரிக்க அது உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள் கொடுப்பதையும் கட்சிகள் சில முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வாக்காளர்களுக்கு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 94 தொகுதிகளில் பணப்புழக்கம் வழக்கத்திற்கு விரோதமாக அதிகமாக இருப்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
பணப்புழக்கம்...
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "பணப்புழக்கம் அதிகமிருக்கும் 94 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு சிறப்பு செலவின பார்வையாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.
கண்காணிப்பு தீவிரம்...
கண்காணிப்பு பணிகளுக்காக பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட உள்ளனர். 12ம் தேதி முதல் இந்த 94 தொகுதிகளிலும் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் மையங்கள்...
234 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ண 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும். வரும் 9 அல்லது 10-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி சென்னை வர வாய்ப்பு உள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பணம் பறிமுதல்...
சமீபத்தில் கரூரில் அன்புநாதன் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. இதேபோல மேலும் சில இடங்களிலும் பணம் சிக்கியுள்ளது. தொடர்ந்து பணம் சிக்கி வருவதும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.