கர்நாடக வன்முறைக்கு கண்டனம்... செப். 16 முழு அடைப்பில் சிபிஐ, பாமக, மமக ஆதரவு!
சென்னை: கர்நாடக வன்முறைகளைக் கண்டித்து வரும் 16ம் தேதி விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பாமக மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து, தமிழகத்தில் வரும் 16ம் தேதி தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முழு கடையடைப்பு நடத்த அறிவித்துள்ளன.
சிபிஐ ஆதரவு
இந்த முழு கடையடைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என அதன் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக
இந்த முழு அடைப்பிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து 16ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக ஆதரவு அளிக்கும். மற்ற அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மமக
இதேபான்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாவும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த கர்நாடக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்திற்கு நியாயமாக வரவேண்டிய அளவு கூட திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. இதைக் கூட சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கன்னட தீவிரவாத அமைப்புகள் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளன.
கண்மூடி பார்ப்ப்பதா?
1991ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு வெளிவந்த உடன் நடைபெற்றது போன்று தமிழர்கள் மற்றும் அவர்கள் உடமைகள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு இரு மாநிலங்களுக்குமிடையே நடைபெறும் இந்த பிரச்சனையை கண் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.காவிரி மீது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை கண்டித்தும், சொத்துகளை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக பங்கேற்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, வைகோ, வாசன்
முன்னதாக இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமாகா தலைவர் ஜிகேவாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.