நாடா புயல் கரையை கடந்தாலும் மழை பெய்யும்- ஆறுதல் செய்தி சொன்ன வானிலை மையம்
நாடா புயல் கரையைக் கடந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் ஏமாற்றிய நிலையில் நாடா புயலால் பெரும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலோ வலுவிழந்து பெருந்தன்மையுடன் கடந்து போய்விட்டது. சென்னையில் மழையைக் காணோமே என்று மக்கள் ஏக்கத்தில் இருக்க, அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ஆறுதல் செய்தி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக இருந்த நடா புயல் வலு இழந்து தாழ்வு மண்டலமாக மாறியது. காரைக்காலுக்கு தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 4 - 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடா புயல் கரையைக் கடந்தது என்றார்.
மழை அளவு எவ்வளவு?
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 5 செ.மீ., செங்குன்றம், சோழவரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம், நாகப்பட்டினத்தில் 2 செ.மீ மழையும், தஞ்சாவூர், காரைக்கால், கும்பகோணம், ஆடுதுறை, திருவையாறு, திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மழை பெய்யும்
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு பகுதியாக வழுவிழக்கும். மீனவர்கள் இன்று மாலை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
புயல் எச்சரிக்கை
கடந்த மாதம் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அதனைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்தது வந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புதன்கிழமை புயலாக உருவானது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு முதலே தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
வலுவிழந்த புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த நடா புயலின் நகர்விலும், வேகத்திலும் வியாழக்கிழமை காலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடா புயல் வியாழக்கிழமை பகலில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை அருகே கரையைக் கடந்தது.
சென்னை நிலவரம்
நாடா புயல் கரையை கடந்தாலும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை தரைக்காற்று வீசக்கூடும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது.