தமிழகம் முழுவதும்... ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டியதாக 1.30 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை: தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதாக 1.30 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜூலை 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மதுரை மற்றும் திருச்சியை சேர்ந்த வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார். அப்போது, அவர் கூறியதாவது:
சென்னையில் மட்டும்...
சென்னையில், வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், கடந்த 12 நாட்களில் 14 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1.30 லட்சம் வழக்குகள்...
சென்னை உட்பட தமிழகம் முழுவதையும் கணக்கிட்டால் சுமார் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னுரிமை தேவை...
சென்னையில் உள்ள நீதிமன்றங்களில், 'ஹெல்மெட்' வழக்குகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். மாலை நேர நீதிமன்றங்கள் சனி கிழமையும் கூட இந்த வழக்குகளுக்காக இயங்கலாம்.
விசாரணை தொடர்கிறது...
அதற்கான உத்தரவை, உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். மதுரை, திருச்சியில், விதிகளை மீறிய வழக்கறிஞர் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடர இருக்கிறது.