ஏன்டா எனக்கு கறி துண்டு நிறையா வைக்கலை: கிடா விருந்து தகராறில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம்: சேலத்தில் கிடா விருந்தில் கறித் துண்டு குறைவாக இருந்ததாகக் கூறி ஏற்பட்ட கைகலப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்து உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த மதி என்பவர் தனது வீட்டு விசேஷத்திற்காக சேலம் மாவட்டம் மஞ்சவாடி கணவாயில் இருக்கும் வெள்ளையன் கோவிலுக்கு 100க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் சென்றார். அங்கு அவர் கிடா வெட்டி நேர்த்திக்கடனை செலுத்தினார்.
மதி கிடா விருந்து அளித்தபோது அருகில் நடந்த மற்றொரு கிடா வெட்டு விருந்தில் சேலம் மாவட்டம் வீராணத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அந்த விருந்துக்கு வீராணத்தைச் சேர்ந்த சண்முகம்(25), சுரேஷ்(24), மாரியப்பன்(35), முருகன்(30), பார்த்திபன்(21) ஆகியோர் மது அருந்திவிட்டு வந்தனர்.
வீராணத்துக்காரர்கள் நடத்திய விருந்தில் சாப்பாடு தயாராக தாமதம் ஆனது. இதனால் வீராணத்து இளைஞர்கள் மதி அளித்த விருந்துக்கு வந்து சாப்பாடு கேட்டனர். அவர்களும் அந்த இளைஞர்களுக்கு கறியும், சோறும் போட அவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு எங்களுக்கு கறித் துண்டு குறைவாக கொடுத்தீர்கள் என்று கூறி அந்த இளைஞர்கள் மதியின் உறவினர்களோடு தகராறு செய்தனர்.
இதையடுத்து அந்த இளைஞர்களுக்கும் மதியின் உறவினர்களான மாயக்கண்ணன், பழனி, பொன்முடி, சஞ்ஜீவன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த கைகலப்பில் இரு தரப்பையும் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வீராணத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.