ஓகி புயலில் சிக்கியவர்களை மீட்கக் கோரி சென்னையில் மீனவர்கள் போர்க்கோலம்- மீண்டும் மெரினா எழுச்சி?
கன்னியாகுமரி மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் மீனவர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
சென்னை : ஓகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி, சென்னை மீனவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஓகி புயலால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்தது. அதே சமயம் கடலில் மீன்பிடிக்கச் சென்று இருந்த மீனவர்கள் பலர் காணாமல் போய் உள்ளனர்.
காணாமல் போன மீனவர்களை தேடி வருவதாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து சொல்லி வந்தாலும், குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இதுவரை காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசு சரியான தகவல் தெரிவிக்கவில்லை என்றும், பிற மாநிலங்களில் தஞ்சமடைந்து இருக்கும் மீனவர்கள் மீட்பது குறித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று குழித்துறை ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இன்று சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 25 மீனவ கிராமங்களைச் மீனவர்கள் கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் களம் இறங்கி உள்ளனர். முன்னதாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தவர்களை போலீஸார் மெரினாவில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்வரிடம் முறையிட முடிவெடுத்து உள்ளனர். இதனால் நொச்சிக்குப்பம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள், பெண்கள் கூடி உள்ளதால் அங்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . அவர்களைக் கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
உடனடியாக முதல்வர் மற்றும் பிற அமைச்சர்கள் உடனடியாக குமரி மாவட்டத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இறந்துபோன மீனவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர். 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை போலீஸார் கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர்.
திருவல்லிக்கேணி முதல் கோவளம் வரை உள்ள மீனவர்கள் ஆங்காங்கே போராடி வருவதால், மெரினாவில் மீண்டும் ஜல்லிக்கட்டு போல போராட்டம் தற்போது மீண்டும் பெரிய அளவில்வெடிக்குமோ என்கிற அச்சம் போலீஸாரிடையே எழுந்துள்ளது. இதனால் மெரினாவிற்கு வரக்கூடிய சாலை மற்றும் கடல் வழி அனைத்திலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.