சைதாப்பேட்டையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை சைதாப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 20ம் தேதி முதல் தமிழகமெங்கும் அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட இயக்கங்களும் போராட்டத்தில் குதித்து உள்ளன. இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிற்சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறுதல், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் சாலை மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 1000 பேரையும் கைது செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல தமிழகத்தில் பல பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். விழுப்புரத்தில் 250 பேரும், ராணிப்பேட்டையில் 200 பேரும் கைதாகி உள்ளனர்.