மாத சம்பளமே ரூ.232 தான்.. கேரள எஸ்டேட்டுகளில் கொத்தடிமைகளாக்கப்பட தமிழர்கள்
செங்கோட்டை : கேரள எல்லையில் உள்ள எஸ்டேட்களில் கொத்தடிகைளாக வேலை பார்க்கும் தமிழர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிலாளர் அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.
தமிழக கேரளா எல்லை பகுதியான தென்மலை அருகிலுள்ளது கலுதுருட்டி அம்பநாடு. இங்கு சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது திருவாங்கூர் டி&ரப்பர் எஸ்டேட். இங்கு 3 பிரிவுகளாக தேயிலை, ரப்பர் மற்றும் ஏலக்காய், கிராம்பு, மிளகு எஸ்டேட் உள்ளது.
தமிழகத்தை சார்ந்த சுமார் 1500 குடும்பத்தினர் அம்பநாடு, அரண்டல், மெத்தாப்பு, ஆணைச்சாடி, கீழ அம்பநாடு, உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் எஸ்டேட் குடியிருப்புக்களில் தங்கி இங்கு பணியாற்றி வருகின்றனர்.
அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தை சார்ந்தவர்கள். தலைமுறை, தலைமுறையாக இங்கு தங்கி பணியாற்றி வரும் இவர்களின் வாழ்க்கைத் தரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அங்கு வசிக்கும் தமிழக தொழிலாளர்களின் நிலை பரிதபத்திற்குரியது தான்.
தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் இவர்களை பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர்கள் வசதி என அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் குடியிருப்புக்கள் இடிந்த இல்லங்களில் இவர்களின் வாழ்க்கை என்பது மிகவும் வேதனையானது.
இரவு நேரங்களில் யாரையாவது விஷ ஜந்துக்கள் கடித்து விட்டால் முறையான மருத்துவம் படித்தவர்கள் இல்லை. மேலும் யாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் இவர்களது வாரிசுகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருவதாக கூறும் இவர்கள் தற்போது இருக்கும் எஸ்டேட் குடியிருப்புக்களில், வேறுவழியில்லாமல் வாழ்ந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
உயிருக்கு ஆபத்தானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை. அதற்குப் பதில் டிராக்டரில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் ஆண்டாண்டுகாலமாக பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் என்பது மிக மிக குறைவுதான்.
232 ரூபாய் தான் அவர்களுக்கு மாத சம்பளம். காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பனியாற்றும் இந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச கூலியாக ரூ.500 ம், 20 சதவிகித போனஸ் போன்ற அடிப்படைத்தேவைகள், குழந்தைகளுக்கு நல்ல கல்வி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலைதோட்ட அலுவலகத்தில் தோட்ட மேலாளர் அறையை பூட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் தலைமையில் எராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரத்தத்தில் இறங்கியுள்ளனர். ஆலை முன்பு சி.ஐ.டி.யூ.சார்பிலும், நுழைவுப் பகுதியில் ஐ.என்.டி.யு.சி.சார்பிலும் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக கேரளா எல்லையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், அகதிகளாக கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்தப்படும் கொடுமைக்கு தீர்வு கிடைக்குமா..என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் ..இந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்களின் வாழ்க்கை அரசின் கையில் தான் உள்ளது.