சென்னை மழையால் 10,640 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம்!
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் 10,000க்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. மழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை மற்றும் நகர்புற பகுதிகளில் சாலைகள் மழை நீரால் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான விளை நிலங்கள் மழை நீரால் மூழ்கி வீணாகியுள்ளன. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில் மணிமங்கலம், ஆதனூர்,முடிச்சூர், மடிப்பாக்கம், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
இதனால் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் பலரும் மேடான பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 10,640 பேர் 114 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்தப் பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்கள் வேலை பார்த்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புறநகர் பகுதிகளில் இதுபோல மழை நீர் தேங்க ஆக்கிரமிப்புகளே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பகுதிகளில் இருக்கும் 7000க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு ஆவண செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.