12 லட்சம் பார்வையாளர்கள்... ரூ. 15 கோடிக்கு விற்பனை : நிறைவு பெற்றது சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னை: கடந்த 13 நாட்களாக நடந்து வந்த சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன.
38வது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் மைதானத்தில் தொடங்கியது. சுமார் 5 லட்சம் தலைப்பு புத்தகங்களுடன் 700 அரங்குகளில் நடைபெற்று வந்த இந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு பேசினார். கழ்ச்சியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம், துணைத்தலைவர் அமரஜோதி, செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன், சைதாப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் தம்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் 25 ஆண்டுகள் தொடர்ந்து புத்தக பதிப்பு துறையில் ஈடுபட்டு வரும் 33 பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ‘சமுதாயத்தில் உள்ளவர்கள் அனைவரையும் படிப்பதற்கு தூண்டும் விழாவாக நான் இதனை (புத்தக கண்காட்சி) கருதுகிறேன். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் தலைமை பண்புகள் வளரும். அறிவும், ஆற்றலும் புத்தகங்களை படிப்பதால் மட்டுமே வளரும். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்களை அடுத்த வருடம் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கேற்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும்'', என்றார்.
‘பபாசி' செயலாளர் கே.எஸ்.புகழேந்தி பேசுகையில், ‘‘கடந்த 13 நாட்களாக நடைபெற்ற புத்தக கண்காட்சியை 12 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். ரூ.15 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளது. பல்வேறு வகையான புத்தகங்கள் ரூ.10 முதல் ரூ.1000-க்கும் மேற்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதனால் எத்தனை புத்தகங்கள் விற்றுள்ளன? என்பதை உடனடியாக கணக்கிடுவது என்பது சிரமம்'', எனத் தெரிவித்தார்.
"ஆயா"வுக்கு விருது
புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த குறும்படமாக மகா விதுரன் இயக்கிய ‘ஆயா' தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த குறும்பட இயக்குனராக ‘தெய்வா' குறும்பட இயக்குனர் ராம் செந்தில்குமாருக்கும், சிறந்த நடிகருக்கான விருது ‘மோனோ லாக்' குறும்படத்தில் நடித்த ராகவ் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சினிமா, அரசியல், அறிவியல், வரலாறு, சமையல், ஜோதிடம், மொழியியல், குழந்தை இலக்கியம் போன்ற துறை சார்ந்த நூல்களும், படிப்பிற்கு உதவும் குறுந்தகடுகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனையானதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகக் கண்காட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்து வருவதால், அடுத்த ஆண்டு முன்னதாகவே சென்னை புத்தக கண்காட்சியை நடத்த உள்ளதாக ‘பபாசி' அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.