தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க எதிர்ப்பு... நாகூரில் 3000 பேர் கருப்புக்கொடி போராட்டம்!
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க தடை விதிக்கக் கோரி நாகூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகூர் : காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க தடை விதிக்க கோரி நாகூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை தொகுதியில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்காலின் தனியார் துறைமுகத்தில் அயல் நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு துறைமுகம் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் நிலக்கரி துகள்கள் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அப்படி பரவும் நிலக்கரி துகள்களால் இந்தப் பகுதி மக்களுக்கு ஆஸ்துமா, கண் அரிப்பு, புற்றுநோய், தோல் நோய் போன்றவை ஏற்படுவதாக அந்தத் தொகுதியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரியும் குற்றம்சாட்டி வருகிறார். எனவே தமிழக அரசு புதுச்சேரி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் தமிழக அரசு இதுவரை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய வலியுறுத்தி இன்று நாகூரில் போராட்டம் நடந்தது. சுமார் 3 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தின் போது கருப்புக் கொடி
ஏந்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் சீமான், கவுதமன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.