இறந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் மீட்பு.. மதுரை அருகே பரபரப்பு.. விஷம் கொடுக்கப்பட்டதா?
Recommended Video
மதுரை: மதுரை அருகே விஷம் கொடுத்து மயில்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தங்குடி அருகே உள்ளது மருதங்குளம். இங்கு ஏகப்பட்ட மயில்கள் வலம் வருவது வழக்கம். காரணம் இப்பகுதி மிகவும் எழில் கொஞ்சும் இயற்கை சூழலைக் கொண்டது. தோப்புகள், வயல்கள் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும். நீர் நிலைகளும் நிறைய உள்ளன.
ஆனால் இந்த மயில்களால் இப்பகுதியில் உள்ள சிலருக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏகப்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்து மயில்களுக்கு தீவனம் போட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் பறந்தது. அனைவரும் விரைந்து வந்தனர்.
50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்திருந்தது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டனர். இந்த மயில்கள் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மயில்கள் இறந்து கிடந்த இடத்தில் ஏராளமான நெல் பரவிக் கிடந்தது. அதில் விஷம் கலந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவற்றை கைப்பற்றி சோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தேசியப் பறவையான மயில் இப்படிக் கூட்டம் கூட்டமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டது மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.