தமிழக வாக்காளர் பட்டியலில் 6.46 லட்சம் போலிகள்... நீக்க தேர்தல் ஆணையம் முடிவு
சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஷேஜ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதாக அதிமுக தவிர்த்த பிற எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தின.
இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, "வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறும்" என்று அறிவித்தார்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு:
இதையடுத்து வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் கடந்த 15 ஆம் தேதி முதல் நடந்தன. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
நீக்கம் செய்ய முடிவு:
இதுகுறித்து அவர், "வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் கீழ், இறந்த வாக்காளர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இறந்த வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட உள்ளன.
97 ஆயிரம் பெயர்கள்:
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் என்ற அடிப்படையில், 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், ஒரே வாக்காளர் எண் கொண்டதாக அறியப்பட்ட 7 ஆயிரத்து 500 பேரின் பெயர்களும், பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7ஐ அளித்த 97,000 பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.
அதிகரிக்க வாய்ப்பு:
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் அடிப்படையில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7ஐ அதிகளவு அளித்தால், இந்த 6 லட்சத்து 46 ஆயிரம் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.