நீங்க போய் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுங்க… கைக் குழந்தையுடன் தேவுடு காத்திருந்த கணவன்மார்கள்
இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் திருமணமான பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்களின் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு கணவன்மார்கள் வாசலில் காத்திருந்தனர்.
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வு எழுத தத்தம் மனைவிமார்களை அனுப்பிவிட்டு குழந்தைகளுடன் கணவன்மார்கள் வெளியே காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக அரசின் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது. இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. நாளை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழகத்தில் உள்ள சுமார் 1000 அரசு ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஆசிரியராக பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.
இதனால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதனால் ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் தேர்வு எழுத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தத் தேர்விற்கு வயது வரம்பு இல்லை என்பதால் திருமணமான பெண்கள் அதிக அளவில் தேர்வு எழுத மையத்திற்கு வந்திருந்தனர். இவர்களது குழந்தைகளை கணவர்மார்களிடம் விட்டுவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர். அப்போது 'ஓ' வென அழும் குழந்தைகளை கையில் வைத்து அழுகையை நிறுத்தி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர் அப்பாக்கள்.
எப்போது, அம்மாக்களே குழந்தைகளை பராமரித்து பாதுகாத்து வரும் நிலையில், அம்மாவை விட்டுப் பிரியும் குழந்தைகளின் அழுகை நிறுத்திவிட்டு, குழந்தைகள் சிரிக்க விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த அப்பாக்கள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தனர்.