வைகோவுக்கு சிறையில் ப.சிதம்பரம் கம்பெனி கொடுப்பார்: மீண்டும் ஏழரையை கூட்டும் ஹெச். ராஜா!
வைகோவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் கம்பெனி கொடுப்பார் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் கைதாவார் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் சிறையில் உள்ள வைகோவுக்கு ப.சிதம்பரம் கம்பெனி கொடுப்பார் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளராக உள்ள ஹெச்.ராஜா அவ்வப்போது பரபர கருத்துகளையும் கூறியும் துடுக்குத்தனமாக பேசியும் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் பட்டுகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, விவசாயிகள் குறித்து கேள்வி கேட்ட நிரூபரை தேசத்துரோகியா எனக்கேட்டு பாய்ந்து பிராண்டினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வெள்ளக்காரி, வெள்ளைத்தோலு என இழிவான வார்த்தைகளால் அர்ச்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்
பல இடங்களில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.
|
வைகோவுக்கு கம்பெனி தருவார்
அதாவது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம் கைதாவர் என தெரிவித்துள்ளார். அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு கம்பெனி கொடுக்கலாம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ப.சிதம்பரத்துக்கு தொடர்பா?
முன்னதாக மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல் - உத்தரவு
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மே 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.