கனமழை எதிரொலி... வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழக மாவட்டங்கள்
சென்னை: வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம்,திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கன மழையின் காரணத்தால் தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் படகுகள் மூலமும், ஹெலிக்காப்டர்கள் மூலமும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி மூலம் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.ஆயிரக்கணக்கனோர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
ரயில் சேவை பாதிப்பு
கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் கடந்த 3 நாட்களாக மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான ரயில்கள் மாற்றுவழித்தடங்களில் இயக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட ரயில்கள் குறிப்பாக தென் மாவட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன. நவஜீவன், கோரமண்டல் உள்பட 12 எக்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளான காமராஜர் சாலை மற்றும் ராஜவீதிகள் வெள்ளநீரில் மிதக்கின்றன. 14 ஏரிகளின் கரைகள் உடைந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் நீரில் மிதக்கிறது.
திருவள்ளூர்
நீர் நிலைகளில் வழிந்தோடும் உபரி நீர் குடியிருப்புகள் சாலைகளை சூழ்ந்துள்ளன. கூவம்,கொசஸ்தை,ஆரணி ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நெற்குன்றம் அருகே உள்ள ரயில் நகர் தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கடலூர்
தற்போது பெய்துவரும் மழையில் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தண்ணீரில் மூழ்கி 21 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மழைக்கு 63 பேர் பலியாகி உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 70 நிவாரண முகாம்கள் மூலம் 58 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
நிவாரணப்பணியில் அமைச்சர்கள் குழு
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 6 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
தேசிய பேரிடர் மீட்புக்குழு
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 38 பேர் சிதம்பரம் வந்துள்ளனர். அவர்கள் மரம் அறுக்கும் இயந்திரம், சிறிய படகு மற்றும் வெள்ளத்தில் மிதக்கும் சாதனங்கள் முதலியவற்றை கொண்டு வந்துள்ளனர். இது தவிர போலீசாரும் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
கனமழையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் நடைபெறவிருந்த தேர்வுகள் வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காய்கறி விலை கிடு கிடு உயர்வு
சென்னை மற்றும் புறநகரில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது.
ஏரிகள் நிரம்பின
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி,பூண்டி எரி, புழல் எரி, சோழாவரம் ஏரி உள்ளிட்டவைகள் நிரம்பியுள்ளன. அதனால் கரையோரத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர்
மாயனூரில் வெள்ள தடுப்பு பணிக் காக 1,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர் மழையின் காரணமாக வெள்ள தடுப்பு பணிக்காக மாயனூர் காவிரி ஆற்று பாதுகாப்புக்கோட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன .
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி முதல் இம்மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஒரு சிறுவன், சிறுமி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சோழவந்தான் சில இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக சோழவந்தான் ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் கிராமத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வைகை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்
நாகையில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நாகையில் உள்ள பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதேபோல வயல்களில் மழைநீர் தேங்கியதால் நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கலூர் ஏரி, வெண்பாவூர் ஏரி மற்றும் அரும்பாவூர் ஏரி ஆகியவை 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள லாடபுரம் பெரிய ஏரி, குரும்பலூர் ஏரிகள் 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. வெங்கலம் சிறிய ஏரி, பாண்டகபாடி ஏரி, ஆய்குடி ஏரி, பெரம்பலூர் சிறிய ஏரி ஆகியவை 50 சதவீதத்திற்கு மேல் கொள்ளளவை எட்டியுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மிதமான மழையே பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்னமராவதியில் சாலைகளில் நாற்றுநடும் போராட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம்
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மீட்பு உபகரணங்களுடன் ராமநாதபுரம் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். கனமழையால் பெருவெள்ளம், கட்டிட இடிபாடுகள், மரங்கள் முறிந்து விழுதல் போன்ற இடர்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், இடிபாடுகளை உடனுக்குடன் அகற்றவும், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
சேலம்
தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் 228 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் நிவாரண தொகை வழங்கப் பட்டுள்ளன. பயிர் சேதத்தை பொறுத்தவரையில் 2,226 ஹெக்டர் அளவிற்கு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆரணி பகுதியில் பல்வேறு இடங்களில் கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வேலூர்
கடந்த 18 ஆண்டுகளுக்குப்பிறகு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தடுப்பணை இல்லாததால் 31 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.