எஸ்பிஐ வங்கியில் இன்று முதல் எந்தெந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா?
எஸ்பிஐ வங்கியில் பெரும்பாலான சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை: எஸ்பிஐ வங்கியில் பெரும்பாலான சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கட்டண வசூல் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
எஸ்பிஐ எனும் பாரத ஸ்டேட் வங்கி இதுவரை இலவசமாக அளித்து வந்த பல்வேறு சேவைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை இலவசமாக அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎம்பிஎஸ் சேவை மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்ய 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும்.
2 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்ய 15 ரூபாய், 5 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்ய 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம். இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏ.டி.எம்.களில் மாதந்தோறும் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் பணம் எடுக்க முடியும். அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு சொந்த கணக்கு இருக்கும் கிளையில் 50 ரூபாயும், ஏ.டி.எம்.ல் 10 ரூபாயும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தலா 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.
10 காசோலைகள் உள்ள புத்தகத்திற்கு 30 ரூபாயும், 25 காசோலைகளுக்கு 75 ரூபாயும், 50 காசோலை உள்ள புத்தகத்திற்கு 150 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவற்றிற்கு சேவை வரியும் உண்டு. அதேபோன்று ஸ்டேட் வங்கியின் வட்டி எனப்படும் ஸ்மார்ட் போன் செயலில் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.