தாய்-சேய் திடீர் மரணம்.. தருமபுரி அரசு மருத்துவமனை முற்றுகை.. பரபரப்பு
தாய்-சேய் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியான கோகிலா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தையும் பிறந்தநிலையில், தாய், சேய் இருவருமே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவர்கள்தான் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தாய், சேய் இறந்தது குறித்தது மருத்துவமனை சரியான விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும் நோயாளி குறித்த ஒரு தகவலை சொல்வதற்குகூட மருத்துவமனையின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் புகார் அளித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உறவினர்களின் இந்த போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.