திருப்பூரில் கணவன் மீது சந்தேகத்தில் மூழ்கிய தமிழ் இசக்கி.. குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தண்ணீரில் மூழ்கடித்து இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். அவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களுக்கு ஷிவன்யா என்ற இரண்டரை வயது மகள் இருந்தார்.
நாகராஜ் பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நாகராஜ் மீண்டும் தமிழ் இசக்கிக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது.
தவிர்ப்பு
இதனால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இந்த விரிசல் நாளடைவில் தமிழ் இசக்கியுடன் பேசுவதையே நாகராஜ் நிறுத்தி விடும் அளவுக்கு சென்றுவிட்டது. மேலும் அவர் போனில் தொடர்பு கொண்டாலும் அவரது அழைப்புகளை நாகராஜ் தவிர்த்து வந்தார்.
தற்கொலை
இந்நிலையில் விரக்தியடைந்த தமிழ் இசக்கி குழந்தையை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று கணவர் வெளியே சென்றிருந்தார்.
நாடகம்
அப்போது குழந்தையை வீட்டிலிருந்த தண்ணீர் டிரம்முக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளார். தண்ணீரிலிருந்து உயிரிழந்த குழந்தையை வெளியே எடுத்து, கட்டிலில் கிடத்திய தமிழ் இசக்கி, தான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் கணவர் வீட்டிற்குள் வந்துள்ளார். செய்வதறியாது திகைத்த தமிழ் இசக்கி,யாரோ வீட்டிற்குள் வந்து குழந்தையை கொன்றுவிட்டதாக நாடகமாடினார்.
வழக்கு பதிவு
இந்நிலையில் நாகராஜ் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் போலீஸார் சந்தேகத்திற்கிடமான கொலையாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பொய்
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசிய தமிழ் இசக்கி , ஒரு கட்டத்தில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும், கணவர் திடீரென வீட்டிற்கு வந்ததால் அவரிடமிருந்து தப்பிக்க பொய் சொன்னதாகவும் தமிழ் இசக்கி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.