தேனியிலும் கந்துவட்டி கொடுமை - ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி!
கந்துவட்டி கொடுமையில் இருந்து காக்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி : தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையில் இருந்து காக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற தாய், மகனை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே குமுணன்தொழு கிராமத்தை சேர்ந்த 48 வயது சரஸ்வதி மற்றும் 28 வயது ஜெகதீசன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். கந்துவட்டி கொடுமை தாங்க முடியவில்லை என்றும், இதில் இருந்து காக்க வலியுறுத்தியும் அவர்கள் உடலில் தீ வைத்துக் கொள்ள முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடூரமான கந்துவட்டி கொடுமை சம்பவத்திற்கு பிறகு மாவட்ட வாரியாக கந்துவட்டி அவலங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
எனவே கந்துவட்டிக் கொடுமைகளுக்கு எதிராக அரசு சட்டரீதியில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.