கடவுள் உள்ளமே.. கருணை இல்லமே.. அன்னை தெரசா பிறந்த நாள் இன்று!
சென்னை: கருணையின் உருவமாக, சேவையின் உறைவிடமாக இன்றளவும் புகழப் படுபவர் அன்னை தெரசா. இன்று அவரது 106வது பிறந்தநாள்.
அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் கடந்த 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார்.
12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்த அன்னை தெரசா, தனது 18 வயதில் கன்னிகா ஸ்திரீயாக மாறுவது என முடிவு செய்தார். இதற்காக வீட்டைவிட்டு வெளியேறி, 'சகோதரி தெரசா' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். 1923-ல் 'சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி' என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்தார்.
பின், 1929-ல் கொல்கத்தா வந்த அன்னை தெரசா, அங்கு ஒரு பள்ளியில் சுமார் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1946-ல் ஏழைகளுக்கு உதவுவதற்காக கற்பித்தல் பணியிலிருந்து விலகிய அன்னை தெரசா, சேவை செய்வதற்காக செவிலியர் பணிக்கான மருத்துவப் பயிற்சி பெற்றார்.
1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றினார்.
1952-ல் 'நிர்மல் ஹ்ருதய்' என்ற இல்லத்தைத் தொடங்கினார். கொல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார். அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டார்.
முதலில் இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட அன்பின் பணியாளர் சபை, பின்னர் வெளிநாடுகளுக்கும் சென்றது.
சமூகசேவை, சகிப்புத்தன்மை மூலம் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. அதன் தொடர்ச்சியாக 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவிற்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது, அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், பிலிப்பைன்சின் ரமன் மகசேசே விருது, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும் கவுரவங்களையும் அவர் பெற்றுள்ளார்.
அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற சேவைகளில் பங்காற்றி வருகிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மானுட சேவையில் ஈடுபட்டு வந்த அன்னை தெரசா 1997-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார். இறப்புக்குப் பின் அவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.