11ம் வகுப்பு படிக்கும் மகளுக்குக் கட்டாயத் திருமணம்.. தாய், மாப்பிள்ளை கைது
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய், மாப்பிள்ளை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள பாலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு இரண்டு மனைவிகள். இவரது முதல் மனைவி செல்வக்கொடி. இவர் கமவரை பிரித்து தனியாகர மருதாள்புரம் என்ற ஊரில் வசித்து வருகிறார். இவரது மகள் அருகில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
செல்வக்கொடி தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதற்காக உறவினரான ஊத்துமலை அருகேயுள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த பசும்பொன் என்பவரை மாப்பிள்ளையாக பார்த்து பேசி முடித்தார். இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் தந்தை கடற்கரை மைனர் பெண்ணான தனது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் விசாரணை நடத்தி மாணவியின் தாய் செல்வக்கொடி, மாப்பிள்ளை பசும்பொன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு மாணவி அவரது தந்தையிடம் ஓப்படைக்கப்பட்டார். கைதான பசும்பொன் தூத்துக்குடியில் உள்ள ஓரு தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.