எப்போ எங்க பள்ளம் வருமோ...? பீதியிலேயே வாகனம் ஓட்டும் சென்னை வாசிகள்!
சென்னை அண்ணாசாலையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் பள்ளம் காரணமாக எப்போது பள்ளம் வருமோ என்ற அச்சத்திலேயே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
சென்னை: அண்ணாசாலையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் பீதியிலேயே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இந்த பிரச்சனைக்கு எப்போது நிரந்தரை தீர்வு வரும் என்றும் அவர்கள் எதிர்ப்பாத்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இதுவரை சிறிய அளவிலேயே உருவான பள்ளங்கள் தற்போது மெகா சைஸாக மாறி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலையில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது.
சிக்கிய பஸ், கார்
இந்தப் பள்ளத்தில் அவ்வழியாக சென்ற காரும் மாநகர பேருந்து ஒன்றும் சிக்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றுதான் சீரமைப்பு..
இதையடுத்து கிரேன் மூலம் காரும் பேருந்தும் மீட்கப்பட்டது. நேற்றுதான் அந்த ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணி நிறைவடைந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இன்று திடீர் விரிசல்
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் 10 அடி நீளத்துக்கு பெரும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு வேறு பாதையில் வாகனங்கள் மாற்றி விடப்பட்டன.
வாகனங்கள் செல்ல அனுமதி
இதையடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் விரிசல் சரிசெய்யப்பட்ட மீண்டும் அந்தப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
எப்போது எங்கு பள்ளம் ஏற்படுமோ..
அண்ணாசாலையில் திடீர் திடீர் என ஏற்படும் பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளது. எப்போது எங்கு பள்ளம் ஏற்படுமோ என்ற பீதியிலேயே அவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.