மௌலிவாக்கம் கட்டிட விபத்தின் 3ம் வருட நினைவஞ்சலி.. இன்னும் சென்னையில் தொடரும் கட்டிட விதிமீறல்கள்
மௌலிவாக்கம் கட்டட விபத்தில் உயிரிழந்த 61 பேருக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் நல மத்திய சங்கம் சார்பில் நேற்று 3-ஆவது ஆண்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மௌலிவாக்கம் 11 மாடி கட்டட விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு 3-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. எனினும் கட்டட விதிமீறல்கள் இன்னும் முடிவுக்கு வராமல் சென்னை சில்க்ஸ் போல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
போரூர் மௌலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டடங்கள் அருகருகே கட்டப்பட்டு வந்தன. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி பலத்த இடியுடன் கூடிய மழையின் போது ஒரு 11 மாடி கட்டடம் இரண்டாக பிளந்து தரை மட்டமானது.
இந்த விபத்தில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு அங்கேயே தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் 61 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர். இது சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தரைமட்டமானது
இந்த கட்டடத்துக்கு அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டடமும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அதுவும் கடந்த நவம்பர் மாதம் தரைமட்டமாக்கப்பட்டது. 61 பேரின் உயிரை பலி வாங்கிய மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் நல மத்திய சங்கம் சார்பில் நேற்று 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த கட்டடத்தின் முன் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
உரிய இழப்பீடு தேவை
இதுகுறித்து அந்த சங்கத்தினர் கூறுகையில், பலியான தொழிலாளர்களுக்கு இந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். இடிந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள், கட்டடம் இடிந்து விழுந்த போது இடிபாடுகள் விழுந்ததால் சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்னும் முடிவுக்கு வராத...
61 பேரை பலி வாங்கிய பின்னர் இன்னமும் கட்டட விதிமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஏதேனும் உயிர் சேதம், பொருள் சேதம் என்றால் மட்டும் கட்டட விதிமீறல்கள் ஆராயப்படுவதாக பேசப்படுகின்றன. ஆனால் அதை வேறொரு சம்பவத்திலா் மக்கள் மறந்தவுடன் அதிகாரிகளும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை மறந்து விடுகின்றனர்.
தொடரும் விதிமீறல்கள்
கடந்த மார்ச் 8-ஆம் தேதி வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதல்தளத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் வரை காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல்
தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடம் 4 மாடிகளுக்கு அனுமதி பெற்று விட்டு 7 மாடிகள் கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 31-ஆம் தேதி அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. இதில் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். ஒன்றன் பின் ஒன்றாக தளங்கள் இடிந்து விழுந்து கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கட்டடம் முழுவதும் தரைமட்டமாகின.
இன்னும் ஏராளம்
இதுபோன்று விதிமீறல்களுடன் பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லாமல் எத்தனையோ கட்டடங்கள் உள்ளன. அவற்றில் அசம்பாவிதம் நடைபெறாத வரை எந்த அதிகாரிகளும் அதை முன்கூட்டியே ஆய்வு செய்ய முன்வர போவதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.