மழை காரணமாக கட்டடம் தகர்ப்பு தாமதமானது: காஞ்சிபுரம் ஆட்சியர்
மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் சரியான முறையில் தகர்க்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.
சென்னை: மழை காரணமாக மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் தகர்ப்புக்கு தாமதம் ஆனதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதியன்று 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 61 பேர் பலியாகினர். இந்த விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அந்த கட்டடத்தின் அருகில் இருந்த மற்றொரு 11 மாடி அடுக்குமாடி கட்டடத்தை இடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், மவுலிவாக்கம் கட்டடம் இன்று மாலை 7 மணி அளவில் இடிக்கப்பட்டது. பிற்பகலில் இடிக்கப்படும் என கூறப்பட்ட கட்டடம் தாமதாமாகவே இடிக்கப்பட்டது. மேலும், மூன்றே வினாடிகளில் கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது.
கட்டடம் தகர்க்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: மழை காரணமாகவே கட்டட இடிப்பில் தாமதம் ஏற்பட்டது. 11 மாடி கட்டடம் சரியான முறையில் தகர்க்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு செய்ததும் தாமதத்திற்கு காரணம். தற்போது சுற்றுப்புறப் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.