திருட்டு விசிடி சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்யும் போலீஸ்.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: திருட்டி விசிடி விற்பதாக கூறி போலீஸார் சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் சோதனை நடப்பதாக திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு காவல்துறை கோர்ட்டில் பதில் அளித்துள்ளது.
மூவிலேண்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆயிரத்து 891 சினிமாக்களின் வீடியோ, டி.வி.டி., எம்.பி.3 போன்றவற்றுக்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் வி.சி.டி., டி.வி.டி. வடிவில் எங்களின் ஏஜெண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படுகின்றன.
ஆனால் முகவர்களை திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசார் தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எங்கள் நிறுவனத்தின் சார்பில் டி.வி.டி., சி.டி. விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்து உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு திருட்டு வீடியோ தடுப்பப் பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து அப்பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி சார்பில் கூடுதல் அரசுப் பிளீடர் சஞ்சய் காந்தி பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், காப்புரிமை தொடர்பான ஆவணங்களை அந்த நிறுவனமோ அல்லது விற்பனையாளர்களோ காட்டவில்லை. விற்பனையாளர்கள் யார் என்பதற்கான பட்டியலையும் அவர்கள் தரவில்லை. ஆனால் அவர்கள் பல்வேறு படங்களை விற்பனை செய்கின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு விற்பனை செய்கிறவர்களை நாங்கள் துன்புறுத்துவதில்லை. சட்டத்தின்படிதான் சோதனை நடத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.