எம்பி ஹரி ஒரு அரசியல் புரோக்கர்... தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கடும் தாக்கு
சசிகலாவை விமர்சிக்க எம்பி ஹரிக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் ஒரு அரசியல் புரோக்கர் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் மோதல் வலுவாக எழுந்துள்ளது. ஒருவர் மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து பேட்டிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலாவை விமர்சிக்க எம்பி ஹரிக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் ஒரு அரசியல் புரோக்கர் என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் எம்எல்ஏ வெற்றிவேல். இது அதிமுகவின் உள்ளே நடக்கும் உச்சக்கட்ட அதிகார மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது தொடர்பாக பேட்டியளித்துள்ள வெற்றிவேல், "அ.தி.மு.க.வை விட்டு சசிகலா, தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான திருத்தணி ஹரி எம்.பி. ஆவேசமாகக் கூறி இருந்தார்.
புரட்சித்தலைவி அம்மாவுடன் 33 வருடம் உடனிருந்து அனைத்து பணிகளையும் கவனித்தவர் சின்னம்மா . அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தபோது திருத்தணி ஹரியும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்தான்.
அரசியல் புரோக்கர்
ஆனால் இன்று சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் தாமாகவே அனைவரும் அ.தி.மு.க.வை விட்டு விலக வேண்டும் என்று கூறுகிறார். இதை சொல்ல திருத்தணி ஹரிக்கு என்ன தகுதி உள்ளது? ஹரி ஒரு அரசியல் புரோக்கர். தலைமை செயலகத்தில் அமைச்சர்களின் அறையில் ஏதோ ஒரு காரியம் சாதிக்க காத்துக் கிடப்பவர்.
அதிமுகவில் யாருக்கும் அருகதையில்லை
சசிகலா மூலம் அ.தி.மு.க.வில் ஏதோ ஒரு வகையில் பயனடைந்தவர்கள் அதிகம். எனவே, சசிகலா பற்றி பேச அ.தி.மு.க.வில் யாருக்கும் அருகதை இல்லை. அ.தி.மு.க.வில் சசிகலா குடும்பத்தினர் கோடி கோடியாக சம்பாதித்து வளர்ந்தார்கள் என்று ஹரி இப்போது சொல்கிறாரே?
ஹரி எப்படி எம்பி ஆனார்
அப்படியானால் போலீசில் புகார் கொடுக்க வேண்டியது தானே? தைரியம் இருக்கிறதா? இவருக்கு எம்.பி. பதவி யார் மூலம் கிடைத்தது? அப்போது ஏன் இதையெல்லாம் அவர் சொல்லவில்லை.
ஜெ.படத்தை செருப்பாலடித்தவர்
நால்வர் அணியில் இருந்து வந்த திருத்தணி ஹரி, அம்மா படத்தை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியவர். அ.தி.மு.க. கட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் சின்னம்மா தலைமையில் டி.டி.வி. தினகரன்தான் அதை வழிநடத்தி செல்ல முடியும்.
எடப்பாடிதான் முதல்வர்
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஹரி இப்போது இது போன்று பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
அதிமுக நடு ரோட்டுக்கு போயிருக்கும்
அன்றைக்கு கூவத்தூரில் சசிகலா 2 நாள் இல்லை என்றால் இன்றைக்கு ஆட்சி இருந்திருக்காது. கட்சி நடுரோட்டுக்கு போய் இருக்கும். நன்றி இல்லாமல் அவர் பேசுகிறார்.
எப்படி கிள்ளிட வேண்டும் என்று தெரியும்
ஹரி போன்றவர்களின் பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவரை எச்சரிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் எப்படி கிள்ளி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
சமரசத்துக்கு இடமில்லை
சசிகலா கட்டுப்பாட்டில் தான் கட்சி இயங்கும். டி.டி.வி.தினகரன்தான் கட்சியை வழி நடத்துவார். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை." என்று தெரிவித்துள்ளார்.