திருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி
அதிமுக எம்பி கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே எம்.பி. சத்தியபாமாவின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுகவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க எம்.பி சத்யபாமா. இவர் கோடிசெட்டிபாளையத்தில் குடியிருக்கிறார். பணி நிமித்தமாக சத்தியபாமா, வெளியூர் அல்லது வெளிமாநிலம் எங்கு விமானத்தில் செல்வதானாலும், கோவை விமான நிலையத்தைதான் வழக்கமாக பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றும் வெளியூர் சென்றுவிட்டு கோவை விமான நிலையம் வந்திறங்கிய சத்யபாமாவை வீட்டுக்கு அழைத்து செல்ல அவரது கார் டிரைவர் செந்தில்குமார் ஸ்கார்பியோ காரில் கோபியிலிருந்து புறப்பட்டார்.
அப்போது, குன்னத்தூரை அடுத்துள்ள செட்டிக்குட்டை பிரிவு என்ற பகுதியில் கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அருண்குமார் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அருண்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், உயிரிழந்த அருண்குமார், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் என்பது விசாரணையில் தெரியவந்தது.