மாட்டிறைச்சி விவகாரம்.. மத்திய அரசுக்கு எதிராக வாய்திறந்த தம்பிதுரை!
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு கிடையாது என அக்கட்சி எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு கிடையாது என அக்கட்சி எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடைச்சட்டத்தில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
நாடுமுழுவதும் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து கடந்த 26ஆம் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
கேரள முதல்வர் பினராய் விஜயன், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலர் மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான தடைச்சட்டத்துக்கு கடும் எதிப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் திட்டத்தை தங்கள் மாநிலங்கள் அமல்படுத்தப் போவதில்லை என்றும் கூறினர்.
வாய்திறக்காத தமிழக அரசு
தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் மாட்டுக்கறி விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை வாய்திறக்காமல் இருந்து வந்தது.
அதிமுகவின் ஆதரவு கிடையாது
இந்நிலையில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு அதிமுகவின் ஆதரவு கிடையாது என்றார்.
அ.தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை
மாட்டிறைச்சிக்கான தடை உத்தரவு மத்திய அரசு கொண்டு வந்த தேவையில்லாத ஒன்று. இதில் அ.தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை என்றும் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்தார்.
கருத்து வேறுபாடுதான்
அ.தி.மு.க.வில் பிளவு என்பதோ?, அணி என்பதோ? கிடையாது. அரசியலில் கருத்து வேறுபாடு வரலாம். அந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சிலர் பிரிந்திருக்கிறார்கள் என்றும் தம்பிதுரை கூறினார்.