நடிகர் எம்ஆர்ஆர் வாசு மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம்
நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன் சதீஷ் (44) நீச்சல் குளத்தில் மூழ்கி நேற்று மரணமடைந்தார்.
மேற்கு மாம்பலம் கோல்டன் காலனியில் வசித்து வந்தார் சதீஷ். மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான ரத்தக் கண்ணீர் படத்தின் 2-ம் பாகத்தை படமாக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் நண்பர்கள் சரவணன், பாலு ஆகியோருடன் வெளியில் சென்றார் சதீஷ்.
குன்றத்தூர், பூந்தண்டலம் கிருஷ்ணா நகரில் உள்ள பங்களாவுக்கு படப்பிடிப்புக்கான இடத்தை பார்வையிட சென்றவர், அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தார். 4 மணிக்கு இறங்கிய அவர் மாலை 6 மணி வரை நீண்ட நேரமாக குளித்துக்கொண்டே இருந்தார்.
அப்போது சதீசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் சதீஷைக் காப்பாற்றி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக மாங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சதீஷின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சதீஷ் நேற்று இரவு 8 மணி அளவில் உயிரிழந்தார். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.