குறை ஒன்றும் இல்லை.. எம்.எஸ் சுப்புலட்சுமியின் 100-ஆவது பிறந்தநாள் விழா
குறை ஒன்றும் இல்லை என பாடிய பாரத ரத்னா எம்எஸ் சுப்புலட்சுமியின் 100-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
சென்னை: இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை பெற்ற எம்எஸ் சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. தனது வெண்கல குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
மதுரையில் கடந்த 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி சுப்பிரமணிய அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக பிறந்தவர் எம்எஸ் சுப்புலட்சுமி.
இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
இசை குடும்பம்
இசை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுப்புலட்சுமிக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது அதீத ஆர்வம் இருந்து வந்தது. 5-ஆம் வகுப்பு வரை தனது படிப்பை நிறுத்திய இவர் கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை நாட்டாமை மல்லி, என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை "சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.
பிரபல திரைப்படங்கள்
இதைத் தொடர்ந்து இவர் சகுந்தலை, சாவித்திரி, மீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழியில் மீராபாய் என்ற படத்தில் நடித்ததால் வடமாநிலத்தவருக்கும் எம்எஸ் சுப்புலட்சுமி அறிமுகம் கிடைத்தது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டினார்.
ஆசியாவின் நோபல் பரிசு
ராமன் மகசசே விருதை பெற்ற முதல் இந்திய இசை கலைஞர் என்ற பெருமையை பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி, கடந்த 1998-இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பெற்றுள்ளார்.
கௌரவிப்புகள்
இன்று திருப்பதியில் அதிகாலை வேளைகளில் இசைக்கப்படும் சுப்ரமாதம் இவர் பாடியதே. இதற்காக தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட தொகையை வாங்க மறுத்து தேவஸ்தானத்தால் நடத்தப்படும் வேத பாடசாலைக்கே அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். மேலும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானால் கௌரவிக்கப்பட்ட இவருக்கு கீழ்திருப்பதியில் அப்போதைய ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டியால் கடந்த 2006-இல் வெண்கல சிலை நிறுவப்பட்டது. காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் பார்டருக்கு எம்எஸ் ப்ளூ (MS Blue) என்று இவரது பெயர் வைக்கப்பட்டது.
மறக்க முடியாதவை
ஏழுமலையானுக்கு 1000 நாமங்களை கூறி அழைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாடிய இவர் பஜ கோவிந்தம் பாடலையும் பாடியுள்ளார். மேலும் இன்றும் பெரும்பாலான இசைக் கச்சேரிகளில் பாடப்படும் குறை ஒன்றும் இல்லை பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மீரா திரைப்படத்தில் இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலை கேட்கும் போது அப்படியே காற்றில் மிதப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும்.
குவித்த விருதுகள்
கடந்த 1954-இல் பத்மபூஷன். 1956-இல் சங்கீத நாடக அகாதெமியின் விருது, 1968-இல் சங்கீத கலாநிதி, 1974-இல் ராமன் மகசசே விருது, 1975-இல் பத்மவிபூஷன், 1998-இல் பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றதன் மூலம் அந்த விருதுகளுக்கு இவர் பெருமையை சேர்த்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.
பஜ கோவிந்தம்
கர்நாடக இசைக்கு ஏராளமான தொண்டாற்றிய எம்எஸ் சுப்புலட்சுமி காஞ்சி மகா பெரியவரின் பக்தையாவார். இவர் மண்ணை விட்டு சென்றாலும் இன்றும் இவரது பாடல்கள் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு , பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.