தமிழ்த் தாய் வாழ்த்துக்கு உயிர் தந்த இசைத் தந்தை எம்.எஸ்.வி!
சென்னை: மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாநதன், ‘நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
சுமார் 1200 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.வி.யின் சாதனைகள், பெருமைகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் தமிழ்த் தாய் வாழ்த்திற்கு இசையமைத்தது.
தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு எம்.எஸ்வி. மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்திருந்தார். இந்தப் பாடலை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும், இசையரசி பி.சுசீலாவும் இணைந்து பாடினார்கள்.
இந்தப் பாடலே இன்றளவும் பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.