"நம் நெஞ்சிலும்.. நாவிலும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்"
சென்னை: கடவுள் தமிழுக்குத் தந்த கொடைதான் கவியரசர் கண்ணதாசன். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கண்ணதாசன் நம் நெஞ்சிலும் நாவிலும் குடிகொண்டிருப்பார்.. இதைச் சொல்லியது கவியரசுடன் இணைந்து பல இசை சாதனைகளைப் படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
2010ம் ஆண்டு மலேசிய தமிழ் மக்கள் சார்பில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய கலை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு எம்.எஸ். விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கவிஞர் காமகோடியன் தொடக்க உரையாற்றினார். மலேசிய கவியரசு கண்ணதாசன் விழாக்குழு தலைவர் பாண்டித்துரை வரவேற்றுப் பேசினார்.
அந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில், கண்ணதாசனுக்கு நிகரில்லை. அப்படி ஒரு வித்வம் அவருக்கு மட்டுமே கைவரப் பெற்றிருந்தது. பாட்டு எழுத அவருக்கு தனி மூட் தேவையே இல்லை. நினைச்ச மாத்திரத்தில் தமிழ் அருவியா வந்து விழும். அப்படி அவர் எழுதின பாட்டு ஒண்ணா ரெண்டா... கடவுள் தமிழுக்குத் தந்த கொடைதான் கவியரசர் கண்ணதாசன். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கண்ணதாசன் நம் நெஞ்சிலும் நாவிலும் குடிகொண்டிருப்பார்..." என்றார் எம்.எஸ்.வி.
உண்மைதான்.. தமிழ் அன்னையின் பிள்ளையாக நம்மை தனது வரிகளால் தினசரி முத்துக் குளிக்கச் செய்தவர் கண்ணதாசன். இன்று வரை அவருக்கு இணையான ஒரு கவிஞரை, பிறவிக் கவிஞரை தமிழ் உலகம் காண முடியவில்லை என்பது ஆச்சரியம்தான். அதுதான் கண்ணதாசனின் பெருமையும் கூட.
இதே விழாவில் பேசிய பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் கூறுகையில், கண்ணதாசனின் பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை. கலைஞர்களுக்கு நல்ல உள்ளம் அவசியம். கண்ணதாசன் போல் பாடல்கள் எழுத கடவுள் அருள் பெற வேண்டும். என்மேல் அதிக அன்பு வைத்திருந்தார். கண்ணதாசன் பாடலை கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்," என்றார்.
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன், திருக்கோவிலே ஓடி வா, கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா போன்ற கண்ணதாசனின் வரிகளைப் பாடி அதற்கு மேலும் உயிரோட்டம் கொடுத்தவர் வாணி ஜெயராம் என்பது நினைவிருக்கலாம்.