விடிய விடிய புத்தாண்டைக் கொண்டாடுங்க... உங்களுக்காகவே 150 பஸ் ரெடி!
சென்னை: சென்னை நகரில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவோரின் வசதிக்காக இரவு முழுவதும் 150 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஜனவரி 1ம் தேதி பிறக்கப் போகிறது. அத்தனை பேரும் புத்தாண்டை வரவேற்க காத்திருக்கின்றனர்.
சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு களை கட்டியிருக்கும். குறிப்பாக கடற்கரைகளில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருக்கும்.
விடிய விடிய பஸ்கள்
புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150 சிறப்பு பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கோவில் -பீச்- சர்ச்
டிசம்பர் 31ம் தேதி இரவு பலர் கடற்கரைகளுக்கும், கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் படையெடுப்பது வழக்கம்.
சுற்றுலாத் தலங்களுக்கும்
அதேபோல ஜனவரி 1ம் தேதி மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளிக்கும் மக்கள் செல்வார்கள்.
மக்கள் வசதிக்காக
இதையடுத்து டிசம்பர் 31ம் தேதி மட்டுமல்லாமல் அடுத்த நாளும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் சிறப்புப் பஸ்களை இயக்கவுள்ளது போக்குவரத்துக் கழகம்.
31ம் தேதி பகல் முதல் 1ம் தேதி மாலை வரை
இது குறித்து மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், புத்தாண்டை முன்னிட்டு 31ம் தேதி பகல் 12 மணி முதல் 1ம் தேதி மாலை வரை வழக்கமாக ஓடும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடியவிடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும்.
அனைத்துக் கோவில்களுக்கும் பஸ் உண்டு
அதிகாலையில் வடபழனி முருகன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு, திருநீர்மலை, மாங்காடு, குன்றத்தூர் மற்றும் சாந்தோம், பெசன்ட்நகர் சர்ச் உள்ளிட்ட வழித்தடங்களில் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிறகென்ன.. ஹேப்பி நியூ இயரை சந்தோஷமா சொல்லுங்க!