மிஸ் கூவாகம் பட்டம் வென்றார் சென்னை திருநங்கை மொபினா
திருநங்கைகளுக்கான அழகிபோட்டியில் மொபினா முதல் பரிசு வென்றார்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் 'மிஸ் கூவாகமாக' சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத ்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.இவர்களை மகிழ்விக்க நேற்று மிஸ் கூவாகம் போட்டி நடத்தப்பட்டது.
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 44 திருநங்கைகள் கலந்துகொண்டு, விதவிதமான உடைகளில் மேடையில் நடைபோட்டனர். காலை, மாலை என 3 சுற்றுகள் போட்டிகள் நடைபெற்றன.
இதில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநங்கை மொபினா 'மிஸ் கூவாகமாக' தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 2-வது இடத்தை சென்னை போரூரை சேர்ந்த பிரீத்தியும், 3-வது இடத்தை ஈரோட்டை சேர்ந்த சுபஸ்ரீயும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம்அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
'மிஸ் கூவாகமாக' தேர்வு செய்யப்பட்ட மொபினா என்ஜினீயரிங் படித்துள்ளார். இதுகுறித்து இவர் கூறியபோது, மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் என்னை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாக கூறினார். அதுபோல் தன்னைப்போன்ற திருநங்கைகளை அவர்களது பெற்றோர்களும் ஏற்றுககொண்டு நன்றாக படிக்க வைத்து சாதிக்க செய்ய வேண்டும் எனவும் திருநங்கைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் மொபினா கேட்டுக் கொண்டார்.