நெருங்கும் பொங்கல்- குளத்திலிருந்து மண் எடுக்க தடை.. தடுமாற்றத்தில் பொங்கல் பானை தயாரிப்பு!
நெல்லை: குளத்து மண் எடுக்க தடை நீடிப்பதால் பொங்கல் பானை தயாரிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இந்த பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம்.
இதற்காக பொங்கல் பானை தயாரிக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் தற்போது மண் பண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ஆனால் பானை தயாரிப்பதற்கு தேவையான மண் கிடைக்காததால் அவர்கள் தொழில் செய்ய வழியின்றி தவிக்கின்றனர்.
இதனால் பொங்க்ல் பானை தேவையான அளவு கிடைக்குமா என்பது கேள்வி குறியாக உள்ளது. இதுகுறித்து நெல்லையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பானை தயாரித்து வரும் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், மண் பண்ட தொழில் செய்வதற்கான மண் கிடைப்பது அரிதாகி விட்டது. இதற்கு அரசின் தடை உத்தரவே காரணமாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் மண் எடுக்க நெருக்கடி அதிகமாக உள்ளது. இதனால் கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பாக சேகரித்து வைத்திருந்த மண் அனைத்தும் காலியாகி விட்டது.
இப்போது புதிதாக மண் எடுக்க வழியின்றி கடுமையாக சிரமப்பட்டு வருகிறோம். ஓரு லோடு மண் ரூ.600க்கு கிடைக்கும் நிலையில் இப்போது ரூ.2500 கொடுத்தாலும் தரமான களிமண் கிடைப்பது இல்லை.
குளங்களில் வெட்டி எடுக்கவும் தடை உள்ளது. வசதி உள்ள செங்கல் சூளை அதிபர்கள் குறிப்பிட்ட இடங்களில் அனுமதி பெற்று ஓப்பந்த அடிப்படையில் தங்களுக்கு தேவையான மண்ணை எடுத்து செல்கி்ன்றனர். குறைந்த முதலீட்டில் தொழில் செய்யும் எங்களால் அதிக பணம் செலுத்தி மண் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.
தற்போது நெல்லை மாவட்டத்தில் சில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மண் எடுக்க வாய்ப்பு இருந்தும் ஏழை மண்பண்ட தொழிலாளர்களுக்கு இதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் பொங்கல் அன்று மண் பானை கிடைக்குமா என்பது எங்களுக்கே தெரியவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்தனர்.