கார் விபத்தில் லேசான காயத்துடன் சென்னை வந்த பூங்கொடி.. 140 நாட்களுக்கு பிறகு முகிலனுடன் சந்திப்பு
சென்னை: கார் விபத்தில் லேசான காயத்துடன் சென்னை வந்த பூங்கொடி, 140 நாட்களுக்கு பிறகு கணவர் முகிலனை சந்தித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என முகிலன் வீடியோ தொகுப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார். அவர் இதை வெளியிட்ட கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் முகிலன் மாயமானார்.
இதையடுத்து நேற்றைய தினம் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலன், சென்னை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை எழும்பூர் சிபிசிஐடி போலீஸ் வசம் உள்ள முகிலனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகிலன் கிடைத்த விஷயம் குறித்து தகவலறிந்த அவரது மனைவி பூங்கொடி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலிருந்து கார் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
சமூக போராளி முகிலன் பிடிப்பட்டது எப்படி? திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேட்டி
அப்போது கார் கள்ளக்குறிச்சி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்தது. இதில் காரில் இருந்த பூங்கொடிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து வேறொரு கார் மூலம் பூங்கொடி சென்னை நோக்கி புறப்பட்டார் பூங்கொடி.
இந்த நிலையில் லேசான காயங்களுடன் சென்னை வந்த பூங்கொடி நேராக எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் காத்திருந்த அவர், கணவர் முகிலனை சந்திக்க போலீஸார் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பின்போது வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உடனிருந்தார்.