முகப்பேரில் வடியாமல் தேங்கிக் கிடக்கும் மழை நீர்- அவதியில் அப்பார்ட்மெண்ட் வாசிகள்!
சென்னை: சென்னை முகப்பேரில் மழை வெள்ளம் இன்னும் வடியாத காரணத்தினால் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.
சென்னை முகப்பேர் கிழக்கு சீதக்காதி சாலையில் நவரத்தினா அடுக்குமாடி குடியிருப்புகள் வரிசையாக உள்ளனர். 1 முதல் 9 பிளாக் வரை தனித்தனியாக உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 9 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது.
கீழ்தளத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிற்கிறது. இதனால் கீழ்தளத்தில் வசித்தவர்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தண்ணீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினார்கள். தண்ணீர் வெளியேற அருகில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டும் அதன் வழியாக தண்ணீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.