138 அடியைத் தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம்.. விரைவில் 142 அடியை எட்டும்
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை 142 அடியை எட்டும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தற்போது நீர் மட்டம் 138 அடியைத் தாண்டியுள்ளது. அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே கால கட்டத்தில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதும் 142 அடி வரை நீர் மட்டும் உயரும் எனத் தெரிகிறது. நீர் மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவைத் தொட்டதும் அணையில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அணையின் கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இன்று மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹரீஸ், கிரிஷ் தலைமையில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகள் ஜார்ஜ் டேனியல், பிரசீது ஆகியோர் இன்று முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர்.
அணையின் நீர் மட்டம், நீர் வரத்து, மழை நிலவரம், கசிவு நீர் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்தனர். அணையின் நீர் மட்டம் 142 அடியை நெருங்கும் பட்சத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்கு வசதியாக ஷட்டர்களை மேலும், கீழும் இயக்கி சோதனை நடத்தினர். தொடர்ந்து நாளையும் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, கேலரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.