முல்லைப் பெரியாறு சர்ச்சைக்குரிய பகுதி: இருவர் குழு ஆய்வு திடீர் ஒத்திவைப்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதியில் சனிக்கிழமை நடக்க வேண்டிய ஆய்வு வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க பகுதியான சர்சைக்குரிய ஆனவச்சாலில் தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தின் சார்பில் வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணி தொடங்கியது. ரூ.4.5 கோடி செலவில் வாகனம் நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிக்கு தடை விதிக்குமாறு தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் கட்டுமானப் பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அந்த இடத்தை ஆய்வு செய்ய சர்வேயர் ஜெனரல் ஆப் இந்தியா ஸ்வர்ணம் சுப்பாராவ், தேசிய வனத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ஆஃப் ஃபாரஸ்ட் சோமு சேகர் ஆகியோர் கொண்ட இருவர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைப்படி 8 பேர் அடங்கிய குழு சர்ச்சைக்குரிய இடத்தை சர்வே செய்யும் பணியை துவங்கியது.
இந்நிலையில் இருவர் குழு அந்த இடத்தில் சனிக்கிழமை ஆய்வு நடத்துவதாக இருந்தது. ஆனால் தெரிவிக்கப்பட்டபடி ஆய்வு நடக்கவில்லை. இந்நிலையில் இருவர் குழு வரும் 30ம் தேதி ஆய்வு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை ஏன் ஆய்வு நடக்கவில்லை என்று விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.