நீக்கப்பட்ட தி.மு.க. 'மாஜி' முல்லைவேந்தன் விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு
சென்னை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட பலரையும் சஸ்பென்ட் செய்ததுடன் விளக்கம் கோரி தி.மு.க. தலைமைக் கழகம் நோட்டீஸும் அனுப்பியது.
இதில் பலரும் விளக்கம் கொடுக்க அவர்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை ரத்தானது. அதே நேரத்தில் முல்லைவேந்தனை நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் பாரதிய ஜனதாவுக்கு போகிறார்; அ.தி.மு.க.வுக்கு போகிறார் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக தே.மு.தி.கவில் முல்லைவேந்தன் இணைகிறார் எனவும் கூறப்பட்டது.
இதை ஆமோதிப்பது போல, விஜயகாந்த் தலைமையில் இணைவதில் தவறு இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் தே.மு.தி.க. தலைமை நிலையத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை முல்லைவேந்தன் நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முல்லைவேந்தன், தி.மு.க.வில் கருணாநிதிக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டவன்; மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கெல்லாம் நான் அடிமை இல்லை. விஜயகாந்துடனான இன்றைய சந்திப்பைத் தொடர்ந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.