நான் கருணாநிதியால் நீக்கப்பட்டவன் என்கிறார்களே! அப்ப முல்லைவேந்தனை மட்டும் நீக்கியது யார்?.. அழகிரி
Recommended Video
மதுரை: நான் கருணாநிதியால் நீக்கப்பட்டவன் என்கிறார்களே அப்ப முல்லைவேந்தனை மட்டும் யார் நீக்கியது என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அழகிரி தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளுமாறு தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. தன்னை கட்சியில் சேர்த்து கொண்டால் என்ன தவறு என்று அவர் கேட்டார்.
இதற்கு எம்எல்ஏ ஜெ அன்பழகன் பதிலளிக்கையில் அழகிரியை கருணாநிதிதான் நீக்கினார். இனி அவரை மீண்டும் சேர்த்து கொள்ள இயலாது என்று கூறியுள்ளார். இதனிடையே பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வது போல் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்புசாமி பாண்டியன் உள்ளிட்டோர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திமுகவினர்
இதுகுறித்து அழகிரி ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில ஊடகத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறுகையில் கட்சியின் செயல்பாடு குறித்து நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். திமுக உள்கட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை எடுத்துக் கொண்டு இவர்களெல்லாம் கட்சியினர் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
தவறுகள்
இதை என் தந்தையிடம் முறையிட்டேன். கட்சி ரீதியிலான தேர்தல் நடைபெறும் முன்னரே சில் தங்களை வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டு போஸ்டர்களை ஒட்டினர். இதையும் என் தந்தையின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இதையடுத்து என தந்தை கருணாநிதி இதுகுறித்து கல்யாணசுந்தரம் என்பவரிடம் கேட்டார். அதற்கு அவர் இந்த தவறுகளை சரி செய்து விடுவதாக கூறினர்.
மீண்டும் இணைக்க
அந்த சமயத்தில் நான் வெளியூருக்கு சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்த போது எனது இரு ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். அதிலிருந்துதான் பிரச்சினையே கிளம்பியது. கருணாநிதி என்னை நீக்கிவிட்டதால் அவரால் மட்டுமே என்னை கட்சியில் மீண்டும் இணைக்க முடியும் என்கிறார்கள் அல்லவா.
பதிலளிக்க முடியும்
ஆனால் என் தந்தையால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தற்போதைய தலைவர் ஸ்டாலினால் மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளனர். கருணாநிதியால் நீக்கப்பட்ட இருவரையும் மீண்டும் சேர்த்து கொண்ட இவர்கள் என்னை சேர்த்து கொள்வதில் என்ன பிரச்சினை வந்துவிடும்? இதற்கு அவர்களால்தான் பதிலளிக்க முடியும் என்றார் அழகிரி.