இரண்டாம் பென்னி குயிக்கே... முல்லை பெரியாறு வெற்றிக்காக மதுரையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா!
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்றதற்காக ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஜெயலலிதாவுக்கு இரண்டாம் பென்னி குயிக் என்று பட்டம் தரப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு வெற்றி
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்தவிடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. ஆனால் 37 ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டத்தின் இறுதியில், தமிழகத்துக்கு வெற்றி கிடைத்தது.
142 அடியாக உயர்த்த நடவடிக்கை
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முன்பு தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த நியாயமான தீர்ப்பினையடுத்து, மத்திய அரசின் ஒத்துழைப்போடு ஜூலை 17ம்தேதி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு மேற்பார்வை குழு எடுத்த முடிவினை அடுத்து; அடைப்பான்கள் கீழ் இறக்கப்பட்டன.
பெரிய வெற்றி
சமீபகாலத்தில் நதிநீர் போன்ற ஒரு முக்கிய பிரச்சினையில் தமிழகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சாதனையின் பயனை சிந்தாமல், சிதறாமல் அதிமுகவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
நன்றி தெரிவிக்க தீர்மானம்
மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முல்லை பெரியாறு பிரச்சனையில் வெற்றியை தந்திட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி அறிவிப்பு கூட்டம் கடந்த மாதம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இரண்டாம் பென்னி குயிக்
பாராட்டு விழா நிகழ்ச்சியின்போது ஜெயலலிதாவுக்கு 'இரண்டாம் பென்னிகுயிக்' என்று பட்டம் தரலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பென்னி குயிக்கிற்கு மணி மண்டபம் அமைத்தவர் ஜெயலலிதா என்பதால் அவருக்கு இந்த பட்டப்பெயர் மிகவும் பொருத்தமாக அமையும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் குதுகலிக்கின்றனர். விழா அதிமுக சார்பில் நடத்தப்படாமல், முல்லை பெரியாறு அணையால் பயன்பெறும் விவசாயிகள் சார்பாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளதுதான் இதில் சுவாரசியம்.
தண்ணி காட்டாம, தண்ணீர் விடுங்க ஆபீசர்ஸ்..
பாராட்டு விழா ஏற்பாடுகள் ஒருபக்கம் என்றால், சரியான நேரத்துக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடாத அதிகாரிகளால் ஐந்து மாவட்ட விவசாயிகளும் நொந்து போயுள்ளனர். பெரியாறில் இப்போது நான்கு டி.எம்.சி தண்ணீர் உள்ளது. நான்கு டி.எம்.சி வருவதற்கு முன்பே, முதல் போகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்பது நடைமுறை. இப்போது அதிகமாக தண்ணீர் வந்தும், திறந்துவிட அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது.